Thursday, September 28, 2006

சண்முகநாதன் சொல்லவேயில்லையா?

முதல்வர் கருணாநிதி கூறியதாவது :-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னை சந்திக்கவும் இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப். என்னை யாரும் சந்திக்க தொடர்பு கொள்ளவில்லை.

என்னதான் நடந்தது? தினக்குரலில் விலாவாரியாக வந்திருக்கிறது.. விபரம் இதோ..


தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு விவகாரம்- `கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது'

[28 - September - 2006] [Font Size - A - A - A]

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விளக்கிக் கூறுவதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டிருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு முயற்சித்ததாகக் கூறுவது வெறும் கட்டுக்கதையென்று அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லையென்ற கலைஞரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கட்சிகளின் வட்டாரங்களும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்ட முக்கியஸ்தர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜூலை முதல் வாரத்திலிருந்து முயற்சி

கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். முதலமைச்சர் கருணாநிதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர்களிடமிருந்து இக்கடிதங்களுக்கான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தன் தமிழகம் வந்து சேருவதற்கு முன்னதாக பல கட்சிகளின் தலைவர்களை மாவை சேனாதிராஜாவும் சச்சிதானந்தனும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

கலைஞரின் வீட்டில் கடிதம் கையளிப்பு

சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நியமனம் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறே அக் கடிதத்தில் வேண்டுதல் விடுக்கப்பட்டது. செப்டெம்பர் 7 ஆம் திகதியும் சம்பந்தன் தனியாகக் கையெழுத்திட்டு பிற்பகல் 2 மணியளவில் கலைஞரின் வீட்டுக்கு தொலை நகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் கடிதத்தை அனுப்பினார்.

கலைஞரின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு

செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமர் கலாநிதி சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய பின்னரும் கூட கலைஞர் கருணாநிதியைச் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பழ.நெடுமாறன் கருத்து

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்க வில்லை என்ற கலைஞர் கருணாநிதியின் கூற்று குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நேற்று புதன்கிழமை மாலை சென்னைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைஞர் கூறியது சகலதுமே உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவினர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு 10 நாட்களாக இடையறாது முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. சந்திப்பதற்கு அவர் மறுத்து விட்டார். இத் தூதுக்குழுவினரை இந்தியப்பிரதமர் சந்திக்க மறுத்தமைக்கும் கருணாநிதி அவர்களைச் சந்திக்க முதலில் மறுத்ததே காரணமாக இருக்கக் கூடும். தமிழக முதலமைச்சரே சந்திக்க மறுத்த தூதுக்குழுவினரை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருக்கக்கூடும். இதற்கெல்லாம் முழுப் பொறுப்பு முதலமைச்சர் கருணாநிதியே என்று நெடுமாறன் கூறினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தரான சுப.வீரபாண்டியனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, `கலைஞர் கருணாநிதி தெரிவித்த கருத்தையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸுடன் நான் தொடர்பு கொண்டு நிலைவரங்களைத் தெரிவித்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ராமதாஸ் என்னைக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரை அவர்களுடன் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதற்கு ராமதாஸ் தயாராயிருக்கிறார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் இயங்கை சென்றுவிட்டதாகவும் ஒரேயொருவர் மாத்திரம் (சிவாஜிலிங்கம்) சென்னையில் நிற்பதாகவும் கொளத்தூர் மணி மூலம் அறிந்தேன். அத்தகவலை டாக்டர் ராமதாஸுக்கு தெரிவித்த போது, சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு என்னை அவர் கேட்டார் சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னார்.

Read More...

Tuesday, September 26, 2006

யாரைக் கேட்டு?

பூங்கா விளம்பரம் எனது பட்டையில்?

தமிழ்மண பின்னூட்ட வசதிக்காகவும் pdf வசதிக்காகவும் என சேர்த்த பின்னூட்ட பதிவு பட்டையில் இப்பாழுது திடீரென பூங்கா என ஒரு விளம்பரப் படம்
புகுந்துள்ளது.

இதற்கான அறிவித்தலை தமிழ்மணம் ஏற்கனவே அறிவித்துள்ளதா?
எனது வீட்டில் உங்களை எனது வசதிக்காக அனுமதித்தாலும் எனது வீட்டில் என்ன நடக்கிறது என்பதை நானும் அறிய வேண்டுமல்லவா?

நாளை பிரபாகரன் வாழ்க எனவோ அல்லது தமிழ் ஈழம் வெல்க எனவோ அல்லது கிழக்கு பதிப்பகத்தின் விளம்பரமோ வரலாம்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் பட்டை அறிவித்தலில் தங்கள் சுதந்திரத்தை அறிவித்துகொள்வது நல்லது.

Read More...

Monday, September 25, 2006

0 comments



படத்தில் சூளமேடு புகழ் டக்ளசுடன் இந்தியப் பிரதமர் அருகில் மகிந்த..
படம் கட்டுரை சுட்ட இடம் புதினம் கொம். கட்டுரை இனி கட்டுரை..

கூர் மழுங்கிய ஆயுதத்தை கையிலெடுக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள்
திங்கட்கிழமை, 25 செப்ரெம்பர் 2006, 18:47 ஈழம்] [ச.விமலராஜா]
சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்துவிட்டதாக இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன.


இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் புதுடில்லியில் முகாமிட்டு, அவரின் தரிசனத்திற்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் சென்னைக்கும் திரும்பியுள்ளனர்.

அதேவேளையில் தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் வேறு சிலர் புதுடில்லி வந்திருப்பதாகவும் இந்திய செய்தி ஊடகங்கள் வழியாக அறிய முடிகின்றது.

தினமணி நாளேடு தமிழர் தலைவாகளான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் புதுடில்லிக்கு வந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இது இந்திய அரசின் தெளிவற்ற கொள்கையையும் தடுமாற்றத்தையும் குறிப்பதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். அத்துடன் இலங்கை இனப்பிரச்சனையில் நீண்டகாலமாக மௌனம் காத்துவந்த இந்திய அரசு வழமைபோல் குட்டையை குழப்புகின்ற வேலையை தொடர்கின்றதோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கின்றது.

ஏனெனில் சிறிலங்கா அரசு வெறுப்படையும் வகையில் இந்திய அரசு தனது அழுத்தத்தை பிரயோகிக்கின்றது என்ற தோற்றப்பாடே அண்மைக்காலமாக தென்பட்டு வந்தது.

அதனடிப்படையில்தான் மகிந்தர்களும் பண்டாரநாயக்கர்களும் ஏன் அனைத்து சிங்கள ஊடகங்களும் இந்தியாவைச் சீண்டி பிறாண்டிக் கொண்டிருந்தன. இந்நிலையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு வரவழைத்திருந்தது இந்தியா.

இச்செய்திகள் வெளிவந்தபோதே இந்திய கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் சுறுசுறுப்பான செயற்பாடுகளில் இறங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

இந்த இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் எனப்படுவோர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான புதுடில்லியின் மாற்றம் கண்டு குழம்பி விட்டனர் போல் தெரிகின்றது.

இந்நிலையில் புதுடில்லியில் இலங்கை இனப்பிரச்சனை ஆலோசனைகள் மீளத் தீவிரமடையத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் கொள்கை வகுப்பாளர்கள் என்றழைப்போரிடம் இந்திய அரசாங்கம் ஆலோசனைகளைப் பெறத் தொடங்கியிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்திய கொள்கை வகுப்புக்குழுக்கள் என்ற பட்டியலில் பல நிறுவனங்கள் புதுடில்லியில் முகாமிட்டு தங்களது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், வெளிவிவகாரத்துறையினர், ஊடகவியலாளர்கள் என்ற பட்டியலில் உள்ளவர்கள் கூடும் மையங்களாக இவை உள்ளன.

அண்மையில் இவ்வகையான கொள்கை வகுப்புக்குழுக்கள் என்றழைக்கப்படுவோரின் கூட்டத்தில் அரசியல் அரங்கில் காணாமல் போயிருந்த வரதராஜப்பெருமாளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் என்.என்.ஜா, லெப்.ஜெனரல் வி.கே.சிங் மற்றும் நாராயணசுவாமி ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இதில் என்.என்.ஜா கடும் போக்காளர். இந்தியாவின் "பிரதான கொள்கை வகுப்பாளர்"(!) சுப்பிரமணியசுவாமி, "சிங்கள ரத்னா" இந்து ராம் மற்றும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் கூட்டணியில் வலம் வருகின்றவர்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்ட இந்த கொள்கை வகுப்புக்குழுக்கள்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு புதுடில்லியிலே சுப்பிரமணியசுவாமியின் தலைமையில் மாநாடும் போட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தங்கள் ஆலோசனைக்கு கீழ்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக அறியமுடிகின்றது.

- இலங்கை இனப்பிரச்சனையின் பின்புலம்

- ஆயுதக்குழுக்கள் உருவாக்கம் ஏன்?

- இந்திய- இலங்கை ஒப்பந்தம் மீதான விமர்சனங்கள்

- சந்திரிகா காலத்து அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள்

- தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிமை

- இந்தியாவின் பங்களிப்பு

- கிழக்கு மாகாண நிலைமை

- தமிழீழக் கோரிக்கையில் விடுதலைப் புலிகள் உறுதியாக உள்ளமை

- அகதிகள் பிரச்சனை

- சிறிலங்காவுக்கான இராணுவ உதவி

- சிறிலங்காவின் இரு பிரதான கட்சிகளுடன் இந்தியாவின் உறவு

என்றெல்லாம் விவாதித்து இறுதியில்

"ஐக்கிய இலங்கைக்குள் பேச்சு மூலமாக இறுதித் தீர்வு- அனைத்து இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்ற கொள்கை முடிவுக்கு வந்திருக்கின்றார்கள்.

புதுடில்லியில் கொள்கை வகுப்பாளர்கள் எனப்படுவோர் இப்படியாக செயற்படும் நிலையில்தான் கியூபாவில் சிறிலங்கா அதிபர் மகிந்தவும் முக்கயமான ஒரு பணியை ஆற்றிவிட்டு வந்திருக்கின்றார்.

கீழே உள்ள இந்தப் படத்தை பார்த்தால் அவர் ஆற்றிய பணி புரியும்.



துணை இராணுவக் குழு டக்ளசை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அறிமுகம் செய்து வைக்கும் மகிந்த ராஜபக்ச

அமைதியை உருவாக்க இராணுவ வலுச் சமநிலையை விடுதலைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர். அமைதி முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.

பேச்சும் யுத்தமும் யுத்தமும் பேச்சுமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் மற்றும் இராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில் இன்னமும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்பது செத்துவிட்டதாக அறிவிக்கப்படாத நிலை நீடிக்கிறது.

ஆனால் நீண்டகாலாமாக இந்திய உளவு அமைப்பின் உதவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வரும்- கடந்த 15 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழீழ அரசியலில் எதுவித தொடர்புமற்று ஆனால் பெயருக்கு சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து ஒரு துணை இராணுவக்குழுவை நடமாட விட்டுள்ள வரதராஜப்பெருமாள் புதுடில்லியில் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?

அல்லைப்பிட்டியில் நடந்தேறியது போன்று அப்பாவி பொதுமக்களை- புத்திஜீவிகளை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கி தொடர்ச்சியாக கொன்று குவித்து வரும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவை மகிந்தர் இந்தியப் பிரதமருக்கு அறிமுகம் செய்தது தற்செயலானதா?

தற்போது தினமணி நாளேடு குறிப்பிடும் தமிழர் தலைவர்களான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் போன்ற வகையறாக்கள் புதுடில்லி அழைக்கப்பட்டிருப்பதன் பின்னணி என்ன?

இவ்வகையானோரை முன்னிலைப்படுத்துவதில் கொள்கை வகுப்புக் குழப்பவாதக் குழுக்கள் முயற்சியாலும் அழுத்தத்தாலும் இந்திய அரசு தடுமாறுகின்றதா?

சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழத் தேசிய கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என்ற இந்திய பிரதமரின் முடிவிற்கும் இவைக்கும் தொடர்பிருக்கும் என்ற சந்தேகமே ஈழத்தமிழர்களிடம் மேலோங்கி இருக்கின்றது.

பல தடவைகள் தோற்றுப்போன இந்திய கொள்கை வகுப்பாளரின் திட்ட வரைவையே மீளவும் இந்திய அரசு ஏற்கப் போகின்றதா?


Read More...