ஆசிய ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆசிய ரசிகர்கள் கொண்டாட்டம்
உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகள் வெளியேறிவிட்ட நிலையில் எஞ்சியுள்ள 4வது ஆசிய அணி இலங்கை பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதனால் ஆசிய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெளியேறியதால் வெறுப்படைந்த ரசிகர்கள், உலகக் கோப்பை போட்டியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். முதல் அரை இறுதியில் நியூசிலாந்துடன் மோதிய இலங்கை, அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விதம் ஆசிய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.
இலங்கை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நியூசி. அணியுடனான அரை இறுதியின் போது, இலங்கை அணிக்கு அந்நாட்டு ரசிகர்களுடன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்களும் உற்சாகமாக ஆதரவு அளித்தனர்.
கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் போட்டி தொடங்கி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஸ்டேடியம் அமைதியாகவே இருந்தது. ஜெயவர்த்தனே விளாசத் தொடங்கியதும், ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். சகலவிதமான வாத்தியக் கருவிகளுடன் ரசிகர்கள் உற்சாகக் கூக்குரல் எழுப்பி, இலங்கை வீரர்களை ஊக்குவித்தனர்.
இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து விளம்பர நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பைனல் நெருங்கிவிட்ட நிலையில் உலகக் கோப்பை போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா விளையாடாததால், நள்ளிரவு வரை கண்விழித்துப் பார்க்கத் தயாராக இல்லாத இந்திய ரசிகர்கள் கூட இலங்கை விளையாடும் பைனலை ஆர்வமுடன் ரசித்துப் பார்க்க தயாராகிவிட்டனர். உலகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் பரவிக் கிடப்பதால், உலகக் கோப்பை இறுதிப் போட்டி பல நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
dinakaran.TN
