Saturday, July 08, 2006
Friday, July 07, 2006
விகடனில் பச்சான் பேட்டி
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், அஜீத், சூர்யான்னு ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற
ஆர்யா, பரத் வரைக்கும், ஒவ்வொருத்தரும் இந்தப் பிரச்னையில் தங்கள் கருத்து என்ன
என்பதைப் பத்திரிகைகள் மூலமா தெரிவிக்கணும். ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை
அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமயமலைக்கும், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்கும் போனா நாங்க எங்கே போறது?
அய்யா, ஈழ விடுதலைப் போராட்டத்தில் உங்களுக்கு ஒரு கருத்து இருக்கும்,
எனக்கு ஒரு கருத்து இருக்கும்... அதை விடுங்க. ஆனா, உயிருக்குப் போராடி
பிள்ளைகுட்டிகளோட வந்து காப்பாத்துங்கன்னு கதறலோட கரை ஒதுங்குறானே நம்ம சகோதரன்...
அவனுக்கு நாம என்ன செய்யணும்னு ஒரு நிமிஷம் யோசிக்க வேணாமா?’’
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் யுத்த அபாயத்தால் தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடற்கரைகளில் தினம்
தினம் அகதிகளாக ஈழத் தமிழர்கள் வந்து குவியும் துயரம் தொடர்கிறது.
இந்தச் சூழலில், வருகிற 8ம் தேதி சென்னையில் இது தொடர்பான அனைத்துக்
கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்
செயலாளர் தொல்.திருமாவளவன். அதற்கான ணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும்
இயக்குநர் தங்கர்பச்சான், தன் உணர்வுகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சோகமும் கோபமுமாக...
‘‘அப்பா எங்கே இருக்கார்னு பிள்ளைக்குத் தெரியாது... பிள்ளை உயிரோட இருக்கானா
இல்லியான்னுகூட அம்மாவுக்குத் தெரியாதுன்னு இருபது வருடங்களுக்கு மேலா வலியே வாழ்க்கையா
உலகம் முழுக்கக் கிடக்காங்க ஈழச் சகோதரர்கள். அந்த அவல வாழ்க்கையைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
இங்கே இருந்து இருபது மைல் தூரத்தில் நம்ம சகோதரன் சாகிறானேங்கிற எந்த வலியும்
வருத்தமும் இல்லாம, நாம டி.வி. சேனலுக்குப் போன் போட்டு பாட்டுக் கேட்டு உட்கார்ந்-
திருக்கோம். எனக்கு அந்தச் சகோதரர்களின் வலி முழுசா தெரியும். காரணம், ஈழத் தமிழ்
சகோதரர்களின் வாழ்க்கையை மையமா வெச்சு ‘தாய்மண்’னு ஒரு திரைப்படத்தை இயக்க
நினைச்சிருந்தேன். அதுக்காக உலகம் முழுக்கப் போய் நூத்துக்கணக்கான அகதிகளைச் சந்
திச்சேன்.
இலங்கைக்கே போய் அந்த மக்களைப் பார்த்தேன். அந்தப் படம் மட்டும் இந்நேரம்
வந்திருந் தால், என் மக்களே திரண்டு பெருங்குரல் கொடுத்திருப்பாங்க. ஓங்கி ஒரே குரலா
ஒலிச்சிருக்கும். அந்த மாதிரி படைப்புகள் வராததுதான் தமிழனோட சாபக் கேடு.’’
‘‘ஏன் அந்தப் படம் இன்னும் ஆரம்பிக்கலை?’’
‘‘ஏங்க, என்ன சொல்றீங்க? இங்கே பெரியாரைத் திரைப்படமாக்கவே தயாரிப்பாளர்
கிடைக்கலீங்க. பொறுக்கி, ரௌடி, தாதா, சமூக விரோதியைக் கொண்டாடுற படங்களை
மட்டும்தானே இப்போ எடுத்திட்டிருக்காங்க. எங்கே பார்த்தாலும் எட்டு கொட்டாயிலேயும் அந்
தப் படங்கள்தானே ஓடுது! துருப்- பிடிச்ச நம்ம சிந்தனையையே மறுபடி உயிர்ப்பித்த, நம்ம
சமூகத்துக்கே பகுத்தறிவு ஒளிகாட்டிய பெரியாரைப் படமா எடுக்கப் பணம் போட ஆள்
இல்லைங்க. பெரியாரா நடிக்கக்கூட அந்த உணர்- வுள்ள சத்யராஜ்தான் ஆர்வமா வந்தார்.
நாகம்மை, மணியம்மையா நடிக்க ஒரு கதாநாயகியும் வர மாட்டேங்கிறாங்க. இதுதான்
இங்கே நிலைமை.
உலகம் முழுக்க எல்லா மொழிகளிலும் அவங்க வரலாற்றை, பண்பாட்டை, கலாசாரத்தைச்
சொல்ற திரைப்படங்கள் இருக்கு. நாமதான் வரலாறே இல்லாம எழுபது வருஷமா
படமெடுத்துட்டு இருக்கோம். தமிழகம் முழுக்க 55 ஆயிரம் அகதிகள் இருக்காங்க. ஒவ்-
வொருத்தருக்குள்ளேயும் எவ்வளவு கதைகள் இருக்கு. அதை ஏன் ஒரு படைப்பாளிகூட
உண்மையான சினிமா- வாக்கலை? வரலாற்றையும் பண்பாட் டையும் ஒதுக்கிட்டு குத்துப்
பாட்டு, அருவா, துப்பாக்கிச் சண்டைன்னு போனா யாருக்கு நஷ்டம்?’’
‘‘இலங்கை போய் வந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்...’’
‘‘அங்கே போய்ப் பார்த்த பிறகுதான் நாம எவ்வளவு வசதியான நல்ல வாழ்க்கை வாழறோம்னு
தெரிஞ்சுதுங்க.
மின்சாரம் கிடையாது. சாலை கிடையாது. மருத்துவம் கிடையாது. விவசாயம் கிடை யாது.
செழித்து வளர்ந்த மண் இப்ப கந்தக பூமியாக் கிடக்கு. எங்கே பார்த்தாலும் பள்ளம் பள்ளமா
இருக்கு. ‘இங்கேதான் பள்ளிக்கூடம் இருந்துச்சு, இங்கே- தான் நூலகம் இருந்துச்சு’ன்னு
பள்ளங்களையாக் காட்டுறாங்க.
ஒரு கவிஞனோட வீட்டுக்குப் போனேன். பத்துக்கு எட்டு சைஸ் அறையில் 13 பேர் வாழ
றாங்க. ஒரே ஒரு விளக்கு இருக்கு. அந்த வெளிச்சத்தில் ஒவ்வொ ருத்தரா வந்து தன்
முகத்தைக் காட்டி, அறிமுகப்படுத்திக்கிறாங்க. ஒரு குட்டிப் பையன் மட்டும் எழுந்து
வராமல் அப்படியே படுத்துக்கிடந்தான். விளக்கை எடுத்துட்டுப் போய்ப் பார்த்தா, கையும்
இல்லை, காலும் இல்லை. ‘கண்ணி வெடியில் சிக்கிட்டான்’னு சொல்றாங்க. அய்யோ..!
அப்பிடியே எனக்கு உடம்பெல்லாம் ஆடிப்போச்சுங்க. அந்தக் குடும்பத் தில் மட்டும் இப்படி
மொத்தம் ஆறு பேர் ஊனமா இருக்காங்க. இப்படி ஒவ்வொரு வீட்டிலேயும் மரணம்.
விதவிதமான துயரம்.
அவங்களுக்கும் நம்மைப் போல பெரியாரும் காமராஜரும்தான் ஆதர்சம்.
பாரதியைத்தான் கொண்டாடுறாங்க. முருகனைத்தான் கடவுளா கும்பிடுறாங்க. ஆனா, பயங்கரமான
வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்காங்க. அப்படித் துன்பப்பட்டு வர்றவங்களுக்கு நாம என்ன
செய்றோம்?
அவங்க ‘அண்ணா’ன்னு கூப்பிடும்போது அப்பிடியே எனக்கு உயிரே நடுங்குது.
அவங்க கஷ்டத்தைப் போக்க என்ன பண்ணியிருக்கோம்?
அங்கே இன்னும் கலை உயிரோடு இருக்குங்க. ஒரு கண்ணு இல்லை, கை இல்லை...
அதோட குறும்படங்கள் எடுக்கிறாங்க. படம் பார்த்தீங்கன்னா, நெஞ்சை அடைக்குது. எப்பவுமே ஒடுக்கப்பட்ட
இனத்தி லேர்ந்துதான் வீரியமான கலைகள் பிறக்கும். பேரழிவுகளைச் சந்திச்ச யூத இனத்திலேர்ந்துதான் ஸ்டீஃபன்
ஸ்பீல்பெர்க் வந்தார். அப்படி இனிமே ஈழத் தமிழர்கள் வருவாங்க.
எந்த தொழில்- நுட்ப வசதியும் இல்லாம அவங்க எடுக்கிற படங்களைப் பார்த்தால்தான், நம்ம லட்சணம்
நமக்கே புரியுது.
இங்கே தமிழ்நாட்ல எல்லாம் இருக்கு. மாத்தி மாத்தி மண்டையைக் குழப்ப, ஆளாளுக்கு ஒரு
சேனல் வெச்சிருக்கான். நாலு ஷோ சினிமா ஓடுது. கோயில் திறக்கிறதுக்கு முன்னாடி சாராயக்
கடை திறந்துடுறான். எப்பவும் செல்போன்- லயே அநா- வசியமா பேசிட்டு அலையு- றான்.
அப்புறம் எப்படி நல்ல விஷயத்- தைச் சிந்திப்பான்? சூடுசொரணை இல்லாத ஒரு தமிழ்ச்
சமூகத்தை உருவாக்கிட்டு இருக்கோம். இது ஈழத் தமிழ்ச் சகோதரர்களை நாம் அரவணைக்க
வேண்டிய நேரம் மட்டுமில்லை, அவர்களிடமிருந்து கத்துக்க வேண்டிய நேரமும்கூட!’’
‘‘ஈழத் தமிழர்கள் பிரச்னையில் தமிழ் நாட்டின் மீடியா, இலக் கியம், கலைத் துறை, அரசியல்-
வாதிகளின் அணுகுமுறை எப்படி இருக்கிறது?’’
‘‘ஐயோ, போங்க! படகு கவிழ்ந்து 60 ஈழத் தமிழர்கள் இறந்தார்கள்ங்கிறது இங்கே ஒரு
சின்ன செய்தி, அவ்வளவுதான்! யாரு பொண்டாட்டியை யாரு வெச்சிருக் கான், இன்னிக்கு
என்ன கள்ளக் காதல் கொலை, கஞ்சா கேஸ் என்னாச்சு, எந்தக் கோயிலுக்குள்ளே யார்
போனாங்கன்னு வேறு எதைப் பத்தியும் சிந்திக்கவிடாம, மக்களைத் தவறான முறையில்
ஊடகங்கள் வழி நடத்துது.
ஈழத்தில் இவ்வளவு பிரச்னை நடக்குதே... எந்த ஒரு தொலைக் காட்சியிலாவது ஈழத் தமிழர்
பிரச்னை பற்றி அரை மணி நேரம் காட்டறாங்களா? ஒரு சமூகத்தின் மிகப் பெரிய
பிரச்னையைப் பேசாத ஊடகங்கள் அந்தச் சமூகத்துக்கே துரோகம் செய்கிறதுன்னுதானே
அர்த்தம்? எப்போ பார்த்தாலும் ஏதாவது நடிகர், நடிகைகிட்டே போய், ‘யாரைக்
காதலிக்கிறீங்க, எப்போ கல்யாணம்?’னு இதே கேள்விகள்- தான். ஈழப் பிரச்னை பத்திக்
கேளுங்க. கேக்கணுமா இல்லியா?
ஊடகங்கள் இப்படின்னா, கலைத் துறை இன்னும் மோசம். ஈழத் தமிழர்களை நகைச்சுவைக்
காட்சிக்கு தான் இவங்க பயன்படுத்துவாங்க. இல்லைன்னா அங்கேயிருந்து ஒரு பெண்
வர்றா, அவளுக்குக் காதல்... இல்லேன்னா, பிரச்னை என்னன்னே புரியாம மேம்போக்கா
எதையாச்சும் எடுக்குற- து... என்னங்க நடக்குது இங்கே?
அப்புறம் நம்ம நடிகர்கள். பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வெச்சிருக்கிற நடிகர்கள் இதுவரைக்-
கும் இந்தப் பிரச்னையில் என்ன பண்ணி இருக்காங்க?
இந்த மாதிரி எரிகிற பிரச்னையில் உங்க அணுகுமுறை என்ன? அதைச் சொல்ல வேண்டாமா?
நீங்க அனுபவிக்கிற வசதி வாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் கொடுத்ததில்லை. உலகம் முழுக்க இருக்கிற ஈழத்
தமிழர்களும் கொடுத்ததுதானே?
மண்ணை இழந்து அடக்கப்பட்டு, அவமானப்பட்டு, கேவலப்பட்டு தன் உயிரையே உருக்கி அவன் சம்பாதிக்கிற பணத்தை ஆளாளுக்குப் போய் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பிடுங்கிட்டு வர்றீங்கள்ல... அப்போ அவங்களுக்கு ஒரு
கஷ்டம்னா, அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்க வேண்டியதும் உங்க பொறுப்பா,
இல்லியா?
இப்போ இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே
உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பித்தானே? அப்போ அவங்க துயரத்திலும் நீங்க
பங்கெடுக்கணுமா, இல்லையா?
ரஜினி, கமலெல்லாம் ஒரு வார்த்தை சொன்னா, அதைக் கேட்கவும் எடுத்துச் செய்யவும்
எவ்வளவோ பேர் இருக்காங்க. அவங்ககிட்ட நிறைய மக்கள் பலம் இருக்கு. ஏன் பேச
மாட்டேங்கிறாங்க? ஒவ்வொருத்தருக்கும் ஒரு அரசியல் பார்வை இருக்கணும். சமூகப்
பிரச்னையோட தங்களை இணைச்சுக்கணும். சும்மா மார்லன் பிராண்டோ நடிப்பைப் பத்தி
சிலாகிச்சா மட்டும் போதுமா?
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம், அஜீத், சூர்யான்னு ஆரம்பிச்சு இன்னிக்கு இருக்கிற
ஆர்யா, பரத் வரைக்கும், ஒவ்வொருத்தரும் இந்தப் பிரச்னையில் தங்கள் கருத்து என்ன
என்பதைப் பத்திரி- கைகள் மூலமா தெரிவிக்கணும். ஒரு படம் முடிச்சுட்டு, துட்டை
அள்ளிட்டு, ஆயில் மசாஜ் எடுக்கவும், இமய- மலைக்கும், ஓய்வெடுக்க வெளி- நாட்டுக்கும்
போனா நாங்க எங்கே போறது?
மனச்சாட்சி வேண்டாமா? நம்ம மக்களுக்கு ஒரு துன்பம் வரும்போது அதுக்கான பொறுப்பு வேண்டாமா? இந்தப் பிரச்னையைக் கண்டுக்காம இருக்கோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேண்டாமா? கார்கில்ல போர்னா தமிழ்நாட்டில் இருந்து ஏராளமா நிதி கொடுக்கிறோம், குஜராத்ல பூகம்பம்னா நிதி கொடுக்கிறோம், கோயில்ல அன்னதானம்னா நிதி கொடுக் கிறோம்... எல்லாம்
நல்ல விஷயம்தான்!
அதெல்லாம் போல இதுவும் ஒரு பெரிய பிரச்னை. உயிர்ப் போராட்டம்.
உதவி பண்ண வேண்டாமா? நம் உணர்வைக் காட்ட வேண்டாமா? ஈழத் தமிழர்களுக்காகப்
பேசுங்க. அகதி முகாம்களுக்குப் போய்ப் பாருங்க. அதுதான் மனிதாபிமானம்.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி போராட்டம் நடத்துறார்.
தோழர் தொல்.திருமாவளவன் கூட்டம் போடுறார். ஆனால், எல்லோரும் ஒண்ணு சேர
வேண்டாமா? அரசியல் பகைமை, கோபங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி ஒரு
நெருக்கடியான சூழலில் ஒரே குரலில் பேசலைன்னா, அப்புறம் எதுக்குப் பொதுவாழ்க்கை?
இதோ, வர்ற 8&ம் தேதி சென்னை மயிலை மாங்கொல்லையில் தோழர் திருமா அனைத்துக்
கட்சிக் கூட்டம் போட்டிருக்கார். இதைத் திருமா நடத்தினா என்ன, யார் நடத்தினா என்ன...
விஜயகாந்த்தே நடத்தினால்தான் என்ன? அங்கே எல்லோரும் வாங்க. மத்திய அரசுக்கு
இந்தப் பிரச்னையின் வீரியத்தைப் புரியவைப்போம்.
திருமா என்னிடம் கூட்டம் சம்பந்தமா பேசினார். ரஜினியில் தொடங்கி திரையுலகில்
முக்கியமானவங்க எல்லோருடைய தொலைபேசி எண்களையும் அவருக்குக் கொடுத்தேன்.
‘நானே அழைக்கிறேன். அவங்க எல்லோரும் வரட்டும்’னார். எல்லோரும் வாங்க. உங்க
ரசிகர்களையும் வரச் சொல்லுங்க. சினிமா, அரசியல் கூட்டம்னா அடிச்சுப் பிடிச்சுக்
கூடுறோமே... இங்கே எல்லோரும் வாங்க. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ், சீனாவின்
தியான்- மென் சதுக்கங் களில் போராட்டக் காலங்களில் கூடிய கூட்டம் மாதிரி லட்சக்கணக்
கான பேர் திரண்டு, தமிழ் இனத்தின் ஒற்றுமையைச் சொல்வோம்.
முப்பதாண்டு காலமா அனைத்தையும் இழந்து அடக்குமுறையில் சிக்கி, அநாதைகளாக,
அகதிகளாக அலைந்து திரியும் நம் சகோதரர்களின் கண்ணீரை, மத்திய அரசுக்கும் உலகுக்கும்
புரியும்படி எடுத்துப் போவோம். கூட்டத்துக்கு வரமுடியா தவங்க, குறைந்தபட்சம் பிரதமருக்கு
ஒரு தந்தியாவது அனுப்பலாம். இந்த நேரத்திலும் இதைச் செய்யலைன்னா அது தமிழ்
இனத்துக்கு நாம செய்கிற துரோகம்!’’
‘‘இது சாத்தியம்தானா?’’
‘‘இப்பிடியே இருந்தா, தமிழ் இனத்தையே தடம் தெரியாம அழிச்சிடுவாங்க. நம் நதிகளை
எடுத்துக்கங்க. காவிரியை கர்நாடகம் பிடிச்சு வெச்சிருக்கு. முல்லைப் பெரியாறு விஷயத்தில்,
கேரளா பிரச்னை பண்றாங்க. பாலாறுக்குக் குறுக்கே அணை கட்ட ஆந்திரா முயற்சி பண்ணுது.
இங்கே ஓடுற தாமிரபரணியை வெளி- நாட்டு குளிர்பான நிறு- வனங்கள் நாசம் பண்- றாங்க.
ஒரு நதியைக்கூட தமிழன் உருப்படியா காப்பாத்த முடிய- லியே... இதெல்லாம் எதனால?
நம்மகிட்டே ஒற்றுமை இல்லை. மயக்கத்திலேயே திரியுறான் தமிழன். கிரிக்கெட்ல தோத்தா,
ஜெயிச்சா கூடிக் குடிக்கிற சமூகமா ஆகிட்டோமே!
அரசியல் கட்சிகளிடமே பொது நல விஷயங்களில் ஒற்றுமை இல்லை. அப்புறம் மக்களிடம்
எப்படி வரும்? நதிநீர் பங்கீட்டில் துவங்கி, ஈழத் தமிழர் பிரச்னை வரை அத்தனை கட்சித்
தலைமையும் ஒண்ணா நிக்கணும். அப்போதான் தமிழன் உருப்படுவான்’’ என்கிற தங்கர்,
பக்கத்திலிருக்கும் பெரியார் படத்தை உற்றுப் பார்த்துவிட்டு நிமிர்கிறார்.
‘‘இதை விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமான சண்டையா பார்க்காம, ஒரு இனம்
அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இருக்க இடமின்றி அலைகிறதேங்கிற மனிதாபிமானத்தோட
எல்லாரும் பாருங்க. அகதிகளா இல்லை, நம்ம சகோதரர்களா அவங்க வாழ்க்கையை
மீட்டெடுத்துத் தர வாங்க. இல்லைன்னா, வருங்காலம் நம்மை மன்னிக்காது!’’
\ ராஜுமுருகன்,
படங்கள்: பொன்.காசிராஜன்
நன்றி
http://www.vikatan.com/av/2006/jul/16072006/av0201.asp
http://www.thamilnaatham.com
Posted by theevu | Permalink | 9 comments
Saturday, June 24, 2006
இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்கும்
பெரியண்ணா உதவலாம்-
இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்கும்'
சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளேடான `இந்து' வுக்கு அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ள கோஹண, பெரியண்ணன் ஆகவோ, நெருங்கிய அயலவராகவோ 2 ஆயிரம் ஆண்டு கால நண்பனாகவோ பாரதம் இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியுமென கூறியுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் முக்கியமான பங்களிப்பை மிகப்பக்கத்திலுள்ள பெரிய நாடென்ற வகையில் இந்தியா வழங்கவேண்டும் என்று வலியுறுத்திக் கருத்துத் தெரிவித்திருக்கும் அரசாங்க சமாதான செயலகத்தின் செயலாளர் நாயகம் பாலித கோஹண, தனது கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்குமென்ற பழையதோர் உவமையையும் கூறி வலுச்சேர்த்திருக்கிறார்.
சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளேடான `இந்து' வுக்கு அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ள கோஹண, பெரியண்ணன் ஆகவோ, நெருங்கிய அயலவராகவோ 2 ஆயிரம் ஆண்டு கால நண்பனாகவோ பாரதம் இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியுமென கூறியுள்ளார்.
பாலித கோஹணவிடம் `இந்து' எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கு தரப்படுகின்றன.
கேள்வி: இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெறுவதற்கு விடுதலைப் புலிகள் ஆட்சேபனை தெரிவிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?
பாலித : என்னால் உண்மையாக அவர்களது எதிர்ப்பை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் தேசங்களை அடிப்படையாக வைத்து அல்லாமல் தனி நபர்கள் என்ற அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர்.
இவர்கள் ஸ்கன்டினேவிய நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், நோர்வேயின் அதிகாரத்தின் கீழேயேயுள்ளனர்.
இது யுனிசெவ் போன்றது. அமெரிக்கா விடுதலைப் புலிகளை தடை செய்துள்ளது. இதற்காக இலங்கைக்கான யுனிசெவ் தலைவராகவுள்ள அமெரிக்கர் விடுதலைப் புலிகளால் ஏற்றுக் கொள்ளப்படாதவரா, இது விடுதலைப் புலிகள் தாங்கள் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளாமல் இருப்பதற்காக கூறும் ஒரு காரணமே.
கேள்வி: இலங்கையில் தற்போது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள வன்முறைகள் குறித்த உங்களது மதிப்பீடுகள் என்ன?
பதில் : விடுதலைப் புலிகள் கிளைமோர் குண்டுகளை வெடிக்காத நாளோ, கைக்குண்டு வீச்சினை மேற்கொள்ளாத நாளோ துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளாத நாளோ கிடையாது. பொது மக்கள் பயணம் செய்யும் பேருந்தின் மீது கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை உலகிலேயே மிகவும் கொடூரமான காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கையாகும். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் காரணமாக வன்முறைகள் தொடர்கின்றன. சமாதானம் ஏற்படவேண்டுமெனில், வன்முறைகள் முடிவிற்கு வரவேண்டும் என நாங்கள் எப்போதும் தெரிவித்து வந்துள்ளோம்.
அரசியல் இலக்குகளை எய்துவதற்கு வன்முறை ஒரு வழிமுறையல்ல என்பதை விடுதலைப் புலிகள் உணரவேண்டும். 1950, 1960 களிலிருந்து உலகம் மாறிவிட்டது. அரசியல் இலக்குகளை எய்துவதற்காக வழிமுறையாக பயங்கரவாதத்தை அது சகித்துக் கொள்வதில்லை.
கேள்வி: விடுதலைப் புலிகள் தங்களுக்கும் இந்த வன்முறைகளுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளதுடன், அரசாங்கமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன?
பாலித: இது ஆழமற்றதாக தென்படுகின்றது. இவை அனைத்தும் ஒரு முறைக்குள் பொருந்துகின்றன. விடுதலைப் புலிகளே இவை அனைத்திற்கும் காரணம். ராஜீவ் காந்தியை கொலை செய்து விட்டு அதனை மறுத்ததை நீங்கள் மறக்கக் கூடாது. அவர்கள் இதனை மறுத்த போதிலும் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய உயர் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் மிகக் கொடூரமான படுகொலைகளில் ஈடுபட்ட பின்னர் அதனை நிராகரித்ததை மறுக்க முடியாது.
இலங்கையில் அதிநவீன கிளைமோரை தயாரிக்கும் தொழில் நுட்பம் விடுதலைப் புலிகளிடம் மாத்திரம் உள்ளதை சொல்ல வேண்டும். வேறு எவரிற்கும் இந்த திறமை கிடையாது.
கேள்வி: இதற்கான ஆதாரங்கள் உள்ளதா அல்லது இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளீர்களா?
பாலித: உலகின் எப்பகுதியிலும் 100 வீத ஆதாரம் கிடைக்கப் போவதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உறுதிப்படுத்த முடியாத ஆதாரங்களிலேயே நீங்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இவற்றிற்கு காரணம் விடுதலைப் புலிகள் என இலங்கை அரசாங்கம் மாத்திரம் குற்றம் சாட்டவில்லை. சொந்த நலன்களற்ற சர்வதேச அமைப்புகளும் இதனை சுட்டிக்காட்டியுள்ளன.
கேள்வி : அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயார் என தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப்புள்ளி என்ன?
பாலித : எந்த இடத்திலும் ஆரம்பிக்கலாம் என நாங்கள் நினைக்கின்றோம். எனினும் குறிப்பிடத்தக்க விடயங்களே ஆரம்பப் புள்ளியாக அமைவது நல்லது.
மனிதாபிமான, அபிவிருத்தி விடயங்களும் இடம்பெறலாம். இவை அனைத்தும் பேச்சுவார்த்தையின் பொருளாக அமையலாம். எனினும், விடுதலைப் புலிகள் இது குறித்து பேசத் தயாராகவில்லை. நாங்கள் வேறு விடயங்கள் குறித்துப் பேசலாம். இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் பணி, கிழக்கிலிருந்து போராளிகளை வடக்கிற்கு கொண்டு செல்வது.
கேள்வி: ஆக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே முக்கியமானது என்கிறீர்களா?
பாலித : பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே முக்கியமானது. இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்தும் பேசுவது முக்கியமானது. அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளது.
கேள்வி : இந்தியா இலங்கை விவகாரத்தில் மேலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற கருத்துகள் இந்தியாவிலும், இலங்கையிலும் முன் வைக்கப்படுகின்றன. உங்களது கருத்து என்ன?
பாலித : இந்தியா எங்களது நெருங்கிய அயல்நாடு. இந்தியா ஒரு பாரிய அயல்நாடு. இந்தியாவிலிருந்து ஒவ்வொரு முறையும் தும்மல் வரும் போது இலங்கைக்கு சளி பிடிக்கும். இந்தியா ஆற்ற வேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது. அது ஒரு மூத்த சகோதரனின் பங்களிப்பாக இருக்கலாம். நெருங்கிய அயல்நாட்டின் பங்களிப்பாக இருக்கலாம். 200 வருட கால நண்பனின் பங்களிப்பாகவும் இருக்கலாம். இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயக நாடு என்ற வகையில் ஆக்கபூர்வமான பங்களிப்பாற்றும் என கருதுகின்றேன்.
கேள்வி : ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விடுதலைப் புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்திருந்தார். எந்தக் கட்டத்தில் இது சாத்தியம் எனக் கருதுகின்றீர்கள்?
பாலித: தனிப்பட்ட ரீதியில் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு வரச் செய்ய முடியுமானால் அது அவர்களை உள்ளடக்குவதாக அமையும். விடுதலைப் புலிகள் இல்லாத எந்தத் தீர்வும் இறுதியில் சாத்தியமில்லை என்றே கருதுகிறேன்.
கேள்வி : ஆக, நீங்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து அவர்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள விரும்புகின்றார்கள் என்ற பதிலுக்கு காத்திருக்கின்றீர்கள்?
பாலித : அவர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு வரச் செய்வதற்கு எம்மாலான அனைத்தையும் செய்வோம். இதுவே அரசாங்கத்தின் விருப்பமாகும். இந்த நாட்டிற்கு இனியும் வன்முறைகள் அவசியமில்லை. இரு தரப்பும் நீதியான தீர்விற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே அவசியம்.
கேள்வி: இராணுவ தளபதி மீதான படுகெலை முயற்சிக்கு பின்னர் அரசாங்கம் இனங் காணப்பட்ட தாக்குதல்கள் மீது தற்பாதுகாப்பு தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டது? இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பாலித : ஒரு இலக்கு இரணைமடுவில் உள்ள விடுதலைப் புலிகளின் சட்ட விரோத விமான ஓடு பாதை, சர்வதேச சிவில் விமான சேவை விதிமுறைகளின் படி அரசாங்கம் சில சர்வதேச நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி சட்டவிரோத ஓடு பாதைகளுக்கு அனுமதி கிடையாது. சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கம் அதனை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
இதேபோல இலங்கையில் எவராவது அரசாங்க அனுமதியின்றி விமான ஓடுபாதையை அமைக்க முயன்றால் அதனை அழிப்போம்.
இது தவிர பிராந்திய பாதுகாப்பு விவகாரமும் உள்ளது. விமான ஓடுபாதையொன்று பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தியா இந்த அமைப்பை பயங்கர இயக்கமாக அங்கீகரித்துள்ளது. இந்த அமைப்பு இலங்கைக்கு மாத்திரமல்ல பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், அயல் நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகவுள்ளது.
கேள்வி : இலங்கையிலிருந்து அகதிகள் வருவது இன்னுமொரு பிரச்சினை. இதனை எவ்வாறு உணர்கிறீர்கள்?
பாலித : அச்சுறுத்தப்பட்ட ஏழை மக்கள் தஞ்சமடைய முயல்கின்றனர். பாக்கு நீரிணையே அதுவாகவுள்ளது. அகதிகள் இந்தியாவிற்கு செல்வதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாங்கள் யு.என்.எச்.சி.ஆருடனும் பேசியுள்ளோம்.
இவ்வாறான அச்சுறுத்தலிற்கு அப்பால் சில அழுத்தங்களையும் அவதானித்துள்ளோம். அரசியல் ரீதியாக சாதகமான விடயம் என்பதால் தமிழ் நாட்டிற்கு அகதிகள் செல்வதை விடுதலைப் புலிகள் விரும்பக்கூடும்.
திருகோணமலையிலிருந்து மன்னாரிற்கு அங்கிருந்து ஏன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள விரும்புகின்றார்கள் என்பது புரியவில்லை. இதைவிட தென்பகுதிக்கோ அல்லது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கோ செல்லலாம் இது எனக்கு புரியவில்லை. இதன் பின்னால் ஏதோவுள்ளது.
thinakkural
Tuesday, June 20, 2006
செங்கோலற்ற தேசத்திற்தான் வங்காலையும் இருக்கிறது.
ஒன்று மட்டும் உறுதி
தீர்ப்பெழுதும் கணம் வரை
உம்மைத் திருத்தவே முடியாது.
- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-
வங்காலைப் படுகொலை பற்றி தாயகக் கவிஞர் புதுவையின் வெளிப்பாடு
ஏதுமறியாத எம் பிள்ளைகளை அமுக்கி
நித்திரையிற் கொல்.
நிலத்திற் காலுரசத் தூக்கிலிடு.
உரித்துச் சதையாக்கிப் பங்கிடு.
உறிஞ்சிய இரத்தம் கலந்து கறியாக்கி
எச்சமின்றி சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பமிடு.
பின்னர் பிள்ளைகளின் தாயைப்பிடி.
அவள் கணவன் முன்னே கவுணைத்தூக்கி
பிணத்தைப் புணருதலுக்கு ஒப்பாக
வெறி தீரும் வரையும் முயங்கு.
முடிந்ததும் பாதியுயிர் போயிருக்கும்
மீதியையும் வெளியேற்றி வீசிப்போ.
கணவனை மட்டும் ஏன் விடவேண்டும்?
பிடித்து மடக்கி முறி.
வதையின் வலியோலம் வெளியேறாதவாறு
சோறளித்த உளியாலேயே
தோண்டிசுவரோரம் எறிந்து செல்.
ஏனென்று கேட்கமுடியுமா உன்னையெவரும்?
உன் கனத்த சப்பாத்தின்
கீழே கசங்குவது தானேஎம் அடிமை ஜீவிதம்?
நேற்று நிலவெறித்த இரவில்
உன்னைப் பிடித்துலக்கிய உடற்பசி வடிந்திருக்கும்.
எங்கள் நெஞ்சில் கொதிப்புறும் நெருப்புக்குவடிகால் ஏது?
வெசாக் நாளில் மாடுரித்த ஒருவனுக்கு
பத்தாண்டு ஒறுப்பளித்த பௌத்த பூமியே!
என்ன தீர்ப்பு வழங்குவாய் இதற்கு?
நாளை நாடாளுமன்றம் கூடும்போது
கண்டனத் தீர்மானம் கொண்டு வருவர் சிலர்.
செங்கோலேந்திய சேவகன் முன்னேவர
சபாநாயகர் சபைக்கு வருவர்
வங்காலைக்கு மட்டும் பதில் வரமாட்டாது.
பனிஉறையும் தேசத்து குளிர் மலைச்சாரலுக்கு
பேசலாம் வருகவென அழைத்துச் சென்றவர்களுக்கும்
வங்காலையின் வலிக்குரல் கேட்டிருக்காது.
தங்கள் கதவுகளைச் சாத்தி
காற்றின் வழிகளை அடைக்கும் ஒன்றியமும்
இந்த உயிர் வதையைக் கணக்கிலெடுக்கப்
போவதில்லை.
எங்களை என்ன செய்யச் சொல்லுகின்றனர்
எல்லோரும்?
கண்காணிக்க வந்துள்ள
முன்னைய களமுனை அதிகாரிகளே!
பிணத்தின் முன்னே தொப்பி கழற்றவும்
மணக்கும் பிணக்குழி தோண்டி எடுக்கவும்
காய்ந்து கிடக்கும் கசங்கிய மலர்களை
கணக்கிலெடுக்கவும் தானா
நீங்கள் இங்கே காத்திருப்பது?
கதிர்காம அழகி “மன்னம்பெரி”யை
தென்னிலங்கைப் பேய்கள் குதறியபோது
எதிர்ப்புக்குரல் முதலில்
எங்களிடம் இருந்துதான் வந்தது.
“சூரியகந்த” புதைகுழிகளை
தோண்டியெடுத்து விசாரணையை தொடக்கு என்று
முதற்குரல் இங்கிருந்துதான் எழுந்தது.
மனிதம் சாகாது கொஞ்சமாயினும் எஞ்சியிருக்கும்
சிங்களத் தோழர்களே!
தோழியரே!
பதிலுக்கு எதிர்பார்க்கின்றோம் உங்களிடமிருந்து
ஒரு பதிலை.
தொடரும் எல்லாக் குற்றங்களுக்கும்
இங்கொரு சித்திரபுத்திரன் கணக்கெழுதுகிறான்.
எழுதும் குறிப்பேடு நிறைந்து வழிகிறது
குற்றங்களாக வங்காலை வரை.
நாளை கைகட்டிக்கொண்டு
தரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்
வழங்கும் தண்டனைகளுக்காக.
ஒன்று மட்டும் உறுதி
தீர்ப்பெழுதும் கணம் வரை
உம்மைத் திருத்தவே முடியாது.
- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-
orupaper
Posted by theevu | Permalink | 3 comments